Saturday, May 29, 2010

வாக்களிப்பு ஆரம்பம்.

வணக்கம் மக்கள்ஸ்,

ரொம்ப சந்தோசமாய் இருக்கு. தனியே ஆரம்பித்து அதன் பின் நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து இப்போது பல பதிவுலக நண்பர்களின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக பதிவுலகம் நம் தமிழ் திரையுலகுக்கு விருது வழங்கும் சிறப்பான தருணத்துக்காக போட்டியிடும் திரை நட்சத்திரங்களை அறிவிக்கும் பதிவில் உங்களை சந்திக்கின்றோம். கடந்தமுறை என் தனிப்பட்ட வலைப்பூவில் வாக்களிப்புகள் இடம்பெற்றாலும் இம்முறை நாம் பலர் ஒன்றாக இணைவதால் இதற்காக புதிய ஒரு வலைப்பூவை வடிவமைத்து அதில் வாக்களிப்புக்களை நடத்த உள்ளோம். அழகான வலைப்பூவில் பாதுகாப்பான முறையில் இந்த வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன.

கடந்தமுறை தெரிவுகள் நான் தனியே தெரிவு செய்தேன் அங்கேயே என் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்கவில்லை. இப்போது குழுவாக இயங்குகையில் மட்டும் அது சாத்தியமா? தெரிவுகளுக்காக முட்டி மோதினோம். இறுதி நேரத்தில் இல்லை இது சரியில்லை ஏற்கமுடியாது என்று எங்களுக்குள் வாக்குவாதப்பட்டோம். இதனால் நீங்கள் எதிர்பார்த்த தெரிவுகளை கொடுத்ததாக நம்புகின்றோம்.

கடந்த சில நாட்களாக இதை பற்றிய கலந்துரையாடலை ஆரம்பித்த நாம் அதன் முன்னோட்டமாக முதலில் இதற்கான லோகோ ஒன்றை தயார் செய்தோம். இன்று உங்கள் வலைப்பூக்களை அது அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. அதன் பின்னர் எங்கள் முதல் பதிவை முன்னோட்டமாக இட்டோம் காரணம். எம்முடன் கை கோர்க்க விரும்பும் நண்பர்களை நாங்கள் தவற விடக்கூடாதே. தங்களுக்கு இது தெரியாதென்றும் யாரும் சொல்லி விடக்கூடாது என்ற முன் யாக்கிரதையும். அதே நேரம் இப்படி ஒரு முயற்சி எடுக்கையில் பல எதிர் மறையான விமர்சனங்கள் வரும் என்பதும் எங்களுக்கு தெரியும். இதுவரை அப்படி எந்த ஒரு எதிர்ப்பும் வரவில்லை என்பது சந்தோசம். சிலர் தங்கள் பின்னூட்டம் வாயிலாக வாழ்த்தும் ஆதரவும் சொன்னதோடு, எம் குழுவில் ஆரம்பத்தில் இருந்த பதிவர்களும் அதன் பின் எங்களுடன் இணைந்து கொண்ட ஆடுகளம் அனுதினன், அவுஸ்திரேலியாவில் இருந்து பதிவிடும் தமிழ் மதுரம் கமல், மனதில் தெறித்த சாரல்கள் மதுரகன், இந்தியாவின் ரசிகன் சௌந்தர், இங்கிலாந்தில் இருக்கும் பங்குச் சந்தை அச்சுதன் போன்றோர் (யாராவது தவற விடப்பட்டிருந்தால் மன்னிக்கவும்) தங்கள் பதிவுகளை எங்கள் இந்த முயற்சி பற்றி இட்டு மிகப்பெரிய ஆதரவை வழங்கி வருகின்றனர். அவர்கள் எல்லோருக்கும் எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அதே நேரம் பின்னூட்டம் மூலம் எங்களை வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றிகள்.

வாக்குகளில் நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக இயலுமானவரை பாதுகாப்பான ஒரு முறையை கையாள்கின்றோம். அந்த வகையில் இன்று முதல் நீங்கள் உங்கள் தெரிவுகளை மேற்கொண்டு உங்கள் விருப்பமானவர்களியும் திறைமை சாலிகளையும் வெல்ல வையுங்கள். உங்களை கவர்ந்தவர் தோற்றுப்போக விடுவீர்களா என்ன?

தெரிவுகளை பொறுத்தவரை கடந்த வருடம் ஜூன் மாதம் தொடக்கம் இந்த வருடம் மே மாதம் வரை(சிங்கம் படத்தை இதில் சேர்க்கவில்லை காரணம் வெளிவந்து ஒரு சில நாட்களே ஆகி இருப்பதால்.) வெளிவந்த படங்கள் பாடல்களை அடிப்படையாக வைத்தே இந்த தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே இதோ படியுங்கள் போட்டியிடும் நட்சத்திரங்களை அதன் பின் வாக்களியுங்கள் உங்கள் நட்சத்திரங்களுக்கு

சிறந்த நடிகர்

இந்த வகையின் கீழ் நாங்கள் தெரிவு செய்தது குறித்த காலத்தில் தங்கள் நடிப்பை வித்தியாசமாக காட்டிய நடிகர்களை. அந்த வகையில் உன்னை போல் ஒருவன் திரைப்படம் மறக்க முடியாத ஒரு திரைப்படம். கமல் தன வழக்கமான பெரிய உருவ மாற்றங்கள் எதுவும் இன்றி இருந்த இடத்தில் இருந்து கொண்டே நடிப்பால் ஓட வைத்த படம். எனவே இந்த வகையில் போட்டியிடும் ஒருவராக கமலை தெரிவு செய்துள்ளோம். அடுத்தவர் ஜெயம் ரவி. சாக்லட் பாய்,சில படங்களில் அதிரடி நாயகன் என வந்தவர் முற்றிலும் வித்தியாசமாய் துணிந்து நடித்து வெற்றியும் பெற்ற படம் பேராண்மை. இளம் நடிகர்களில் அற்புதமான முயற்சி செய்து அபாரமாக நடித்தவர். இந்த வகையில் உங்கள் வாக்குக்காக இங்கே போட்டி இடுகின்றார். அடுத்தவர் கார்த்தி. ஆயிரத்தில் ஒருவனில் இந்த படத்தை தாங்கிப்பிடித்து நடித்த ஒரு நல்ல நடிகர் என்ற வகையில் அவரும் ஒரு போட்டியாளர் ஆக இதே படத்தில் தன அற்புதமான நடிப்பாற்றலால் சரித்திரப்படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடித்த பார்த்தீபனும் போட்டியிடுகின்றார். மறு பக்கம் தன விரல் வித்தை வீண் பன்ச் எல்லாம் விட்டு இளைய நடிகர்களுக்கு நல்ல ஒரு உதாரணம் காட்டி வெறுத்தவர்களும் ரசித்த விண்ணை தாண்டி வருவாயா படம் கொடுத்த சிம்பு ஆகியோர் போட்டி இடுகின்றனர். உங்கள் வாக்குகளே தீர்மானிக்கப்போகின்றன. யார் சிறந்த நடிகர் என்பதை.

சிறந்த நடிகை.

கடந்த வருடம் நடிப்பில் நடிகைகளும் அசத்த தவறவில்லை. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி கவர்ச்சி என்றாலும் சரி நடிப்பென்றாலும் சரி தூக்கி சுமக்க தான் சரியானவர் என நிரூபித்த ரீமா சென் இங்கே போட்டி இடுகின்றார். மறுபக்கம் ஜெசியாக வாழ்ந்து காட்டி இப்பிடி ஒரு காதலி கிடைக்கமாட்டாளா என ஏங்கவைத்த திரிஷா, மறுபுறம் யதார்த்தத்தைக் காட்டிய அங்காடித் தெரு அஞ்சலி பெரிதாக பிரபலம் இல்லாவிட்டாலும் இம்முறை கடுமையான போட்டியைக்கொடுப்பார் என எதிர்பார்கப்படுகிறது. இவர்கள் இப்படி இருக்க முழு மசாலா படங்களில் கூட தங்கள் நடிப்பை காட்டிய இன்னும் இரண்டு நடிகைகளும் இங்கே போட்டி இடுகின்றார்கள். கவர்ச்சியை பிழிந்து காட்டியதுடன் வில்லத்தனமாக நடித்த ஸ்ரேயா மற்றும் இந்த காலப்பகுதியில் அதிக படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகையாக திகழும் தமன்னா ஆகியோர் இங்கே போட்டி இடுகின்றனர். கண்டேன் காதலை, பையா என இவர் படங்கள் அமைகின்றன. இதில் பையா பட கதாபாத்திரம் பலரால் ரசிக்கப்பட்ட ஒன்று. உங்களை கவர்ந்து சிறந்த நடிகையாக தெரிவாகப்போவது யார். வாக்களித்து முடிவை நீங்களே தீர்மானியுங்கள்

சிறந்த வில்லன்.

பயம் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டே பயப்படுத்திய வேட்டைக்காரனில் நடித்த சலீம் கெளசுடன், கந்தசாமி படத்தில் சாதாரணமாய் வந்து வில்லத் தனம செய்த கிருஷ்ணா மற்றும் மலை மலையில் மோதிய பிரகாஷ்ராஜ் இவர்களோடு வாமணனில் கலக்கிய ரகுமான் ஆகியோர் போட்டி இடுகின்றனர். கடந்த வருடங்களோடு ஒப்பிடுகையில் இந்த வருடம் வில்லன்கள் பவர் குறைவே.

சிறந்த நகைச்சுவை நடிகர்.

நகைச்சுவை நடிகர்களில் இந்த மனிதர் ஒரு சில படங்களில் அசத்தி இருப்பார். வெடுகுண்டு முருகேசனில் பசுபதியுடனும், ஆதவன் படத்தில் தனி ஆவர்த்தனமும் நடத்தி இருப்பார் வடிவேல். மறுபுறம் கண்டேன் காதலை மலை மலை என தன் பங்குக்கு சந்தானம் விறு விறு என முன்னேறி வருகின்றார். கோவாவில் பிரேம்ஜி அமரன் நகைச்சுவையை கொடுக்க மாசிலாமணி, தமிழ் படம் போன்றவற்றில் கலக்கிய எம்.எஸ்.பாஸ்கரும் இம்முறை கோதாவில் இறங்கி உள்ளார். ஜெயிக்கப்போவது யார்? முடிவு உங்கள் கையில் .

சிறந்த இசையமைப்பாளர்.

இவர்களை பொறுத்தவரை ஆஸ்கார் விருது பெற்ற பின் தமிழில் முதன் முதலாய் இசை அமைத்த விண்ணை தாண்டி வருவாயா படத்துக்காக பரிந்துரைக்கப்படுகின்றார் ஏ.ஆர்.ரஹ்மான். இவரை தொடர்ந்து ஒரு பெரிய படத்துக்கு அற்புதமாய் இசை கொடுத்த மருமகன் ஜி.வி. பிரகாஷ் ஆயிரத்தில் ஒருவன்,அங்காடி தெரு(நான்கு பாடல்கள்) போன்ற படங்களுக்காகவும், யுவன் சங்கர் ராஜா தான் இசை வழங்கிய வாமணன், பையா,கோவா போன்ற படங்களுக்காக பரிந்துரைக்கப்படும் அதே நேரம், நடிகராக அவதாரம் எடுக்கும் விஜய் அன்டனியோ அங்காடித்தெரு,நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன் போன்ற படங்களில் அதிரடி இசையை கொடுத்து தன்னையும் இங்கே கொண்டு வந்து விட்டார். பாடல்கள் படத்தில் இல்லாவிட்டாலும் தன இசையால் அசத்திய கமலின் மகள் சுருதி ஹாசன் உங்கள் பார்வையில் நல்ல இசை அமைப்பாளரா? வாக்களிக்க தயாராகுங்கள். இல்லையேல்ஆதவன் படத்துக்காக ஹரிஷ் ஜெயராயும், படங்கள் சொதப்பினாலும் குட்டி,கந்தசாமி போன்ற பட பாடல்கள் ரசிக்க முடிந்தவை ஹிட் ஆனவை என நீங்கள் எண்ணினால் தேவி ஸ்ரீ பிரசாத்தை வெற்றி பெற வையுங்கள். வெல்லப்போகும் இசை அமைப்பாளர் யார். காத்திருங்கள் முடிவுகளுக்காக.

சிறந்த பாடலாசிரியர்.

தாய் தின்ற மண்ணே என்ற உணர்ச்சி நரம்புகளை புடைக்க வைக்கும் பாடல் ஒன்றே இவரை தூக்கி வந்து இங்கே இருத்தி இருக்கிறது. அவர் தான் வைர வரிகளுக்கு சொந்தமான வைரமுத்து. அதேநேரம் குத்து பாடல்களை அதிகம் எழுதும் கபிலன் கூட அடக்க ஒடுக்கமாக எழுதிய ஆதவனில் இடம்பெற்ற வாராயோ வாராயோ மற்றும் அங்காடித் தெரு பட பாடலான உன்னை காதலி என்று சொல்லவா பாடல்கள் மூலம் உள்ளே வந்து விட்டார். மறுபுறம் விவேகா கந்த சாமி பட பாடல்களுக்காகவும் வேட்டைக்காரனின் சின்னத் தாமரைக்காகவும் ஈரத்தில் நெஞ்சங்களை ஈரமாக்கிய மழையே பாடலுக்காகவும் கந்த கோட்டை பட பாடலான எப்படி என்னுள் காதல் வந்தது பாடல்கள் மூலம் நிலையாக உள்ளே வந்துள்ளார். மறுபுறம் காதல் பாடல்களால் கவரும் நா.முத்துக்குமார் இம்முறை அன்காடித்தெருவில் இடம்பெற்ற மூன்று பாடல்களான உன் பேரை சொல்லும் போதே, கதைகள் பேசும்,அவள் அப்படி ஒன்றும் போன்ற இனிய பாடல்களால் போட்டியில்.கவிதாயினி தாமரையோ இனிமையான உணர்வுகளோடு கதை பேசும் பாடல்களை எழுதுபவர் நாணயத்தில் நான் போகிறேன் மேலே மேலே என பெண்களின் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு விண்ணை தாண்டி வருவாயாவிலும் பாடல்களை எழுதி போட்டியாளராகி விட்டார். உங்களை வரியால் கவர்ந்தவர் எவரோ அவரே இம்முறை சிறந்த பாடலாசிரியர்.

சிறந்த பாடகர்.

ஆண் பாடகர்களை பொறுத்தவரை கடந்த வருடத்தில் தான் பாடிய எல்லா பாடல்களையும் ஹிட் ஆக்கிய கார்த்திக் கடுமையான போட்டியை எல்லோருக்கும் வழங்குவார் என எதிர்பார்க்கின்றோம். ஆதவனில் ஹசிலி பிசிலி, ஆயிரத்தில் ஒருவனில் ஓ ஈசா, பையாவில் சுத்துதே சுத்துதே, விண்ணை தாண்டி வருவாயாவில் விண்ணை தாண்டி வருவாயா, சுறா சிறகடிக்கும் நிலவு என இவர் ஹிட். மொழியே இல்லாமல் அர்த்தமே இல்லாவிட்டாலும் இதமாய் ஓ மகாசீயா என பாடிய ஹரிஹரன் இசையமைப்பாளராய் அவதாரம் எடுத்து பாடிய மோதி விளையாடு, கண்டேன் காதலை படத்தில் சுத்துது சுத்துது பாடல்கள் இவர் இங்கே வரக் காரணம், ஆதவனில் இடம் பெற்ற வாராயோ வாராயோவுக்காக உன்னி கிருஷ்ணன், வேட்டைகாரனில் இடம் பெற்ற சின்ன தாமரைக்காக கிரிஷும், விண்ணை தாண்டி வருவாயாவில் இடம்பெற்ற கண்ணுக்குள் கண்ணை வைத்து பாடலுக்காய் நரேஷ் ஐயரும், ஈரம் படத்துக்கு மழையே மழையே என பாடிய ரஞ்சித்தும், ஆயிரத்தில் ஒருவன் படத்தில் தாய் தின்ற மணி பாடிய விஜய் யேசுதாஸும், என ஒரு பெரும் பட்டாளமே களத்தில் குதித்திருக்கின்றது. வெற்றி யார் கையில் என்பது உங்கள் கையில்.

சிறந்த பாடகிகள்

இந்த வகையில் போட்டி எப்படி இருக்கப்போகின்றது என்பது எங்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான கேள்விதான். விண்ணை தாண்டி வருவாயாவில் மன்னிப்பாயா பாடலும் அங்காடித் தெருவில் இடம்பெற்ற உன் பேரை சொல்லும் போதே போன்ற பாடல்களால் இங்கே இடம் பிடிக்கின்றார் ஸ்ரேயா கோஷல், மறுபுறம் வகை வகையாய் பாடல்களை பாடும் சுசித்ரா சின்னத்தாமரைக்காகவும் கந்தசாமியின் excuse me பாடலுக்காகவும் உங்கள் வாக்குகளுக்காக காத்திருக்கின்றார். பெண்களை கவரும் பாடல்களான நான் போகிறேன் மேலே என நாணயப்பட பாடலை பாடிய சித்ராவும் அசலில் துஷ்யந்தாவை அளித்த சுமுர்கியும் போட்டியிட உங்களை ஆட வைத்த என் உச்சி மண்டை பாடலுக்காய் சாருலதா மணியும் அமைதியான ஒரு பாடலாக பொக்கிஷத்துக்காக நிலா நீ என பாடிய சின்மயியும் கடுமையான போட்டி ஒன்றுக்காய் தயாராகி உள்ளனர்.

ஆதிக்க நாயகர்கள்.

இந்த வகை நாங்கள் தெரிவு செய்யக்காரணம் நீங்கள். போட்டி என்று வந்தால் இவர்கள் நால்வரும் இல்லாமல் இருக்குமா. இதில் என்ன சுவாரஸ்யம் என்றால் வழக்கமாய் சில வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் இந்த வகையில் அடங்கும் மூவரும் இம்முறை அதை மருந்துக்கும் தொடவில்லை. அதே நேரம் இவர்கள் நடித்த படங்கள் இந்த வருடம் மெஹா ஹிட் என சொல்லவும். முடியாது. திரை ரசிகர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான படத்தை இவர்கள் கொடுக்கவும் இல்லை. அதேநேரம் இவர்கள் இல்லாமல் திரை உலகமும் இல்லை என்ற நிலை இருக்கின்றது. கடந்த கால கட்டத்தில் தொடர் வெற்றிகளை குவித்துக் கொண்டு வந்த சூர்யா கொஞ்சம் சென்டிமென்ட்,காதல்,நகைச்சுவை என்று கலந்து கட்டிக் கொடுத்த ஆதவன் கொஞ்சம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் உங்களுக்கு அவர் சிறந்த பொழுது போக்கு படத்தை கொடுத்ததாக தோன்றினால் உங்கள் வாக்கு அவருக்கே. அடுத்தவர் தல, கடந்த வருடம் இவர் நடித்து வந்த படம் அசல், மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ஏகன் அடியை தொடர்ந்து வந்த படம். ஓரளவுக்கு சிலரை திருப்திப்படுத்தினாலும் எல்லோரும் பாராட்டும் படி இந்தப்படமும் அமையவில்லை. ஆனால் அசல் உங்களை அசத்தி இருந்தால் நீங்கள் தலைக்கு வாக்களிக்கலாம். அடுத்தவர் விக்ரம். படம் வெளிவருவதோ நீண்ட நாட்களுக்கு ஒருதடவை. வரும் படங்களுக்கு ஏமாற்றினால் திரை உலகுக்கு அது இழப்பே. காரணம் மிகப்பெரிய தயாரிப்பில் அதிர்பார்ப்பில் வந்த திரைப்படம் பதிவர்களின் விமர்சன விளையாட்டாலும் எதிர்பார்ப்பை பூரணமாக பூர்த்தி செய்யாததாலும் மிகச்சிறந்த படம் என்ற தகுதியை இழந்தது. இந்த படத்தில் விக்ரம் உங்களை சந்தோசப்படுத்தி இருந்தால் இவர் தான் இந்த வருடத்தின் இந்த வகையில் வெற்றியாளர். அடுத்தவர் விஜய். கடந்த ஐந்து படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெறாமல் போனது மட்டுமன்றி ஒரே மாதிரிப்படங்களை கொடுத்து ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இன்று நஷ்ட ஈடு கேட்கும் நிலைக்கு கூட தள்ளப்பாடுள்ளார். போதாத காலத்தில் ஒரேமாதிரிப் படங்களை கொடுத்து சலிப்படைய வைத்தாலும் வேட்டைக்காரன் சுறா என்ற இரண்டு படங்களும் உங்களை கவர்ந்திருந்தால் விஜய் சிறந்த பொழுது போக்கு நடிகர் என நீங்கள் எண்ணினால் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்.
பொதுவாக இந்த நால்வரையும் பார்க்கும் போது தமிழ் சினிமாவின் இப்போதைய இளைய முன்னணி நடிகர்கள். இவர்கள் நால்வரையும் தவிர்க்க முடியாது. மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் வெற்றி என பல செல்வாக்கு உடையவர்கள். இவர்களின் பட வெற்றி தோல்வி தமிழ் சினிமாவில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்தும் நேரத்தில் இந்த நால்வரின் சறுக்கல் நிலையிலும் இவர்களின் வெற்றி தோல்வியினால் திரை உலகில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியவர் யார் என வாக்களியுங்கள்.

சிறந்த இயக்குனர்.

இந்த வகையில் கடுமையான ஒரு போட்டி எதிரபார்க்கப்படுகின்றது. அதே நேரம் போட்டியாளர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இதுவும் ஒன்று. நாடோடிகள் என்ற ஒரு படம் ஓடிய ஓட்டம் எல்லோருக்கும் தெரியும். இதன் இயக்குனர் சமுத்திரக்கனியுடன் உன்னை போல் ஒருவன் என்ற விறுவிறுப்பான பாடல்கள் திரையில் இல்லாத படத்தைக் கொடுத்த சக்ரி போட்டியிடுகின்றார். ஆயிரத்தில் ஒருவன் என்ற சரித்திரப்படத்தை எடுத்து பல உண்மைகளை சொன்ன செல்வராகவன் இயக்குனராக இங்கே போட்டியிட ஏற்கனவே அற்புதமான படங்களை கொடுத்த ஜனநாதன் பேராண்மை என்னும் தமிழ் சினிமாவுக்கு வித்தியாசமான ஒரு படத்தைக் கொடுத்தார். வாழ்வியலோடு பொருந்திய படங்களை தரும் வசந்தபாலன் அங்காடித் தெரு மூலம் தன பெயரையும் இங்கே கொண்டுவர ஆவிகள் பற்றிய ஒரு திரில்லர் படம் எடுத்த அறிவழகன் மற்றும் காதலை அற்புதமாக சொல்லி தன்னை நிரூபிக்கும் கெளதம் மேனன் ஆகியோருடன் ரேணி குண்டா இயக்குனர் பன்னீர் செல்வமும் இம்முறை களத்தில் குதித்துள்ளனர்.

சிறந்த படம்.

இந்த வருடத்தில் இறுதியான தெரிவு. யதார்த்தத்தின் உருவமாக நட்பையும் சொன்ன படமான நாடோடிகள், சரித்திரத்தை சொன்ன படமான ஆயிரத்தில் ஒருவன், படங்களை பஞ்சராக்க வந்த தமிழ் படம், மெல்லிய காதலை மனதோடு சொல்லிய விண்ணை தாண்டி வருவாயா? ஆவிகளை மீண்டும் ஒரு தடவை கூட்டி வந்த ஈரம், கமலின் இன்னொரு முயற்சியில் வந்த உன்னை போல் ஒருவன், குறிப்பிட்ட பிரதேச தொழிலாளரின் வாழ்வை சொன்ன அங்காடித்தெரு, புதுமுகங்கள் அசத்திய ரேணிகுண்டா படங்கள் சிறந்த படத்துக்கான தெரிவில். உள்ளன.

தெரிவுகளும் தந்தயிற்று இனி வாக்களித்து வெற்றியாளரை தெரிவு செய்யப்போவது நீங்கள் தான். இதை பற்றிய அறிவிப்பை நாங்கள் வெளியிட்ட உடனேயே உங்கள் ஆதரவை தந்த அத்தனை நல உள்ளங்களுக்கும் நன்றிகள். Face book இல் இதற்கான ஒரு குழுமம் இட்டு நண்பர்களை சேர்த்த வேளை கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் சேர்ந்து இந்த முயற்ச்சிக்கு மிகப்பெரிய ஆதரவை தந்துள்ளனர். நீங்களும் சேர விரும்பின் கீழுள்ள லிங்கை தொடருங்கள்.
எங்கள் கடின உழைப்பில் இதை ஆரம்பித்திருக்கின்றோம். பல பிரபலங்கள் கூடி இருக்கின்றார்கள். இந்த முடிவுகளை திரை உலகமும் எதிர்பார்க்கலாம் காரணம் பதிவர்களாகிய நாங்களும் நீங்களும் இன்று மிகப்பெரிய சக்தியாக உருவாகி இருப்பதால். இப்போது முதல் வாக்குகளை நீங்கள் செலுத்தலாம். உங்களுக்காக 3 வாரங்கள் இருக்கின்றன. உங்கள் மனம் கவர்ந்தவர், உங்கள் நட்சத்திரம் வெல்ல வேண்டுமா. வாக்களியுங்கள். கள்ள வாக்கு போடணுமா? முடியவே முடியாது. எனவே நம்பகத் தன்மையான ஒரு வாக்கெடுப்பு இது என்பதை உறுதியாக சொல்கின்றோம். ஒன்று பட்டு சாதிக்க உங்கள் ஆதரவையும் வேண்டுகின்றோம்.

பதிவுலக நண்பர்களே,

இங்கே நாங்கள் உங்களுக்கு இந்த வாக்கெடுப்பு பற்றிய விபரம் சொல்லும் லோகோ பல தந்துள்ளோம். உங்கள் வலைப்பூக்களிலும் இதை சேர்த்து எங்களை ஆதரிக்கவும். இது தனியே இலங்கை பதிவர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. எல்லா நாட்டு பதிவர்களும்
கரம் கோர்க்கலாம். திரை உலகுக்கும் பதிவுலகுக்கும் பாலம் அமைப்போம்.

இங்ஙனம்,
ஏற்பாட்டுக்குழு.
Friday, May 28, 2010

திரையுலகிற்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 - முடிவுகள்

வணக்கம் மக்கள்ஸ்,

கடந்த மூன்று வாரமாக உங்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக நடைபெற்ற திரையுலகுக்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் 2010 இன் விருது வழங்கும் பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. ஏற்க்கனவே குறிப்பிட்டது போல இரண்டாவது முறையாக இடம்பெறும் இந்த வாக்கேட்டுப்பில் பலர் ஆர்வமாக வாக்களித்து இந்த செயலை வெற்றி பெற வைத்துள்ளனர். ஏற்ப்பாட்டுக்குழுவினர் என்னும் ரீதியில் சந்தோசமடைவதுடன் உங்க எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எங்கள் ஆரம்ப பதிவில் குறிப்பிட்டது போல ஒருவர் இருவராகி பின்னர் ஒரு சிறு குழுவாக வாக்கெடுப்பை ஆரம்பித்து அதன் பின் ஒவ்வொரு பதிவராக எங்களோடு கைகோர்க்க இன்று அதிகமான பதிவர்களின் ஆதரவுடன் வெற்றிக்கொடி நாட்டியுள்ளோம். வாக்கேடுப்புக்கென தனி வலைப்பூவை ஆரம்பித்தது மட்டுமன்றி வாக்கெடுப்பையும் கூடியளவு பாதுகாப்புடன் நேர்மையாக நடத்தி முடித்ததில் உங்களுக்கும் எங்களுக்கும் பெருமை தான்.
திரை உலகில் ஒவ்வொரு பிரிவுகளையும் வகையாக்கி கடந்த ஜூன் மாதம் முதல் இவ்வருட மே மாதம் வரையான காலத்தில் கலக்கிய பிரபலங்கள் படங்களை இங்கே போட்டிக்காக தந்திருந்தோம். சில வாக்காளர்கள் இதை கவனிக்காது எங்கள் மீது கேள்விக்கணை தொடுத்திருந்தனர். அவர்களுக்கு ஏற்க்கனவே தகுந்த ஆதாரங்களை காட்டி இருப்பினும் இப்போது மீண்டும் ஒரு முறை அதை நினைவூட்டுகின்றோம். தெரிவுகளை  பொறுத்தவரை நாங்கள் போட்டிக்காக சேர்த்தான் யாரும் இங்கே போட்டியிட தகுதியற்றவர்கள் என சொல்ல முடியாதளவிற்கு தெரிவுகள் இருந்தாலும் ஒரு சில நட்சத்திரங்களை நாங்கள் தவற விட்டமைக்கு மன்னிப்பு கோருகின்றோம். தொடர்ந்து வரும் வருடங்களில் இது நடக்காது என்பதையும் தெரிவித்துகொள்கின்றோம்.

தங்கள் கருத்துக்களை பின்னூட்டம் வாயிலாக ஏராளமானோர் பகிர்ந்திருந்தாலும் சில தனி நபர தாக்குதலை அமைந்த பின்னூட்டங்களை நாங்கள் வெளியிடவில்லை. காரணம் வாக்களிப்பில் அவை தேவையற்ற உரையாடல்களுக்கே வழி வகுக்கும் என்பதால். எனவே வெளியிட முடியாத பின்னூட்டங்கள் இட்ட நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கும் அதே நேரம் உங்களுக்கும் எங்கள் நன்றிகள். மிக ஆர்வமுடன் வாக்களித்த வாக்காளர்களுக்கும், எங்கள் லிங்க் லோகோவை தங்கள் வலைப்பூக்களில் இட்டு ஆதரவளித்த நண்பர்களுக்கும் இதற்கான விளம்பரமாக எங்கள் லோகோவை திரட்டிகளில் இணைத்து அமோக ஆதரவளித்த தமிழிஷ்,யாழ்தேவி, தலைவன் போன்ற திரட்டிகளுக்கும் எங்கள் நன்றிகள்.
இங்கே தனிப்பட்டு யார் பெயரையும் நாங்கள் குறிப்பிட்டு நன்றி சொல்லாமல் விட காரணம் யாரையும் தவற விடக்கூடாது என்பது மட்டுமன்றி பலர் எமக்கு தங்கள் ஆலோசனையையும் ஆதரவையும் வழங்கி இருந்தனர் என்பதே. நீங்கள் எல்லோரும் எங்கள் நன்றிக்குரியவர்களே.
வாக்களிப்பு நடைபெறும் காலத்தில் வாக்காளர்கள் எந்தளவிற்கு இதில் உடன்பாட்டுடன் ஈடுபட்டனர் என்பது Facebook போன்ற சமூக தளங்களில் இதற்கான பிரசாரமும் மின் அஞ்சல மூலமான பிரசாரமும் நல்லா உதாரணம். சில வகையில் அதிக வாக்குகள் கிடைக்க முக்கிய காரணமாக இதை சொல்லலாம். குறிப்பிட்ட ஒருவருக்கு வாக்களிக்கும் படி வாக்களிப்பு நடைபெற்ற வலைப்பூவை சுட்டி எங்களுக்கே மின் அஞ்சல வந்தது என்றால் பாருங்களேன்.

வாக்களிப்பு முடிந்தாயிற்று இதோ நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த முடிவுகள் இப்போது.

சிறந்த பாடலாசிரியர்.

இந்த வகையை பொறுத்த மட்டில் ஆரம்பம் முதலே நா.முத்துக்குமாருக்கும் தாமரைக்கும் இடையில் பலத்த போட்டி இடம்பெற்றது. மற்ற பாடலாசிரியர்கள் பெரிதாக போட்டியை வழங்காதது கவலையே. ஆனால் 96 வாக்குகள் அதிகம் பெற்று சிறந்த பாடலாசிரியராக பாடல்களால் கதை பேசும் நா.முத்துக்குமார் தெரிவாகி உள்ளார்.
அளிக்கப்பட்ட வாக்குகள் தொடர்பான விபரம் பெற இங்கேசொடுக்குங்கள்.

சிறந்த பாடகி.

இந்த வகையில் முதலாமிடத்துக்கான போட்டி அதிகம் இருக்கவில்லை. ஆரம்பம் முதலே ஒருவர் முன்னிலையில் இருக்க. அடுத்த இடத்துக்கான போட்டி மிக சுவாரஸ்யமாக இருந்தது. ஆரம்பம் முதலே வாக்குகளை அள்ளிய கொஞ்சும் குரலுக்கு சொந்தக்காரியான ஸ்ரேயா கோஷல் 466 வாக்குகள் வித்தியாசத்தில் சிறந்த பாடகியாக தெரிவாகி உள்ளார்.

சிறந்த பாடகர்.

சிறந்த பாடகிகளுக்கு கிடைத்த மொத்த வாக்குகளை விட இந்த வகைக்கு கிடைத்த வாக்குகள் குறைவே. ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாக கிடைத்த ஒரு வகையும் இது மட்டுமே. இங்கேயும் பெரிய போட்டி என சொல்ல முடியாதளவிற்கு கார்த்திக்கின் ஆதிக்கம் ஆரம்பம் முதல் தொடர்ந்தது. முன்னவர் முன்னிலை வகிக்க மற்றையோர் தமக்குள்ள முட்டி மோதினர். கார்த்திக்குக்கு ரஞ்சித் ஓரளவு சவால் விட எண்ணினாலும் 197 வாக்குகள் வித்தியாசத்தில் உசிரை கொள்ளும் பாடல்களை தரும் கச்சிதக்குரலோன் கார்த்திக் சிறந்த பாடகராக தெரிவானார்.

சிறந்த இசையமைப்பாளர்.

கடந்த வருடம் போல இம்முறையும் ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் எந்த சவாலும் இன்றி முன்னணியில் திகழ்ந்தாலும். மற்ற இசை அமைப்பாளர்களுக்கு கிடைத்த வாக்கு எண்ணிக்கை அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த வருடம் கலக்கிய ஒருவரான தேவி ஸ்ரீ பிரசாத்க்கு கிடைத்த வாக்குகள் 8 மட்டுமே, இம்முறை குறைவான வாக்குகளை பெற்றவர் அவரே. இம்முறை சிறந்த இசையமைப்பாளராக 555 வாக்குகள் வித்தியாசத்தில் உங்களால் தெரிவானவர் சந்தேகமே இன்றி விண்ணை தாண்டிய நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

சிறந்த நகைச்சுவை நடிகர்.

இந்த வகையில் ஆரம்பம் ஒன்று முடிவு இன்னொன்றாக அமைந்தது எங்களுக்கும் சிறிது ஆச்சரியமே. ஆரம்பத்தில் யாருமே அசைக்க முடியாது போன்ற ஒரு வேகத்தில் வடிவேலுக்கு அதிக வாக்குகள் கிடைத்தாலும் நாள் செல்ல செல்ல அவரை மெதுவாக முந்த தொடங்கிய சந்தானம் வெற்றிக்கோட்டை தொட்டிருக்கின்றார். 120 வாக்குகள் வித்தியாசத்தில் நகைச்சுவை சந்தணம் சந்தானம் இம்முறை விருதினை பெறுகின்றார்.

சிறந்த வில்லன்.

இந்த வகையில் முதலிடத்துக்கு இருவர் முட்டி மோதினாலும் பின்னர் ஒருவர் முந்தியது நடந்துள்ளது. ஆரம்பத்தில் வேட்டைக்காரன் திரைப்படத்தில் நடித்த சலீம் கௌஸ் வாக்குகளை குவித்தாலும் அதன் பின்னர் செல்லம் பிரகாஷ்ராஜ் தன் வில்லத்தனத்துக்கு  கிடைத்த 165 அதிக வாக்குகள் என்னும் சொத்தினால் வெற்றி பெற்றுள்ளார்.

சிறந்த இயக்குனர்.

இம்முறை மிக பரபரப்பை ஏற்படுத்திய ஒரு வகை இது. கடைசிவரை கடுமையான போட்டியை கொடுத்த ஒரு வகையும் இது. பரவலாக வாக்குகள் பதியப்பட்ட ஒரு வகையான இந்த வகையில் இந்த வருடம் வந்த இரண்டு யதார்த்தமான படங்களை  இயக்கிய இயக்குனர்கள் தமக்குள் கடுமையான போட்டியை கொடுத்தனர். 26 வாக்குகள் வித்தியாசத்தில் கெளதம் மேனனை வென்று தொடர்ந்து அருமையான படங்களை வழங்கி வரும் அங்காடி தெரு இயக்குனர் வசந்தபாலன் தெரிவாகி உள்ளார்.

சிறந்த படம்.

இயக்குனரில் யார் சிறந்தவர் என்ற போட்டி நடந்ததோ அதே போல இங்கும் கடுமையான போட்டி நடந்தது. ஆரம்பத்தில் விண்ணை தாண்டி வருவாயா படம் வாக்குகளை அள்ள தடுமாறிய அங்காடி தெரு அதன் பின் கம்பீரமாய் வாக்குகளை பெற்று 147 வாக்குகள் வித்தியாசத்தில் சிறந்த படமாக தெரிவாகி உள்ளது.

ஆதிக்கம் செலுத்தும் நாயகர்கள்.

இந்த வகையை பெரும்பாலானா வாக்காளர்கள் விளங்கிக்கொள்ளவில்லை இப்போதும் தெளிவற்று இருப்பாவர்கள் இந்த வகை பற்றி நாம் இட்ட கடந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். தனி மனித தாக்குதல்கள் இடம்பெற்ற வகையும் இதுதான். அதே போல பாரிய விளம்பரம் மின்னஞ்சல்கள் குழுக்கள் என பிரசாரம் செய்யப்பட்ட வகையும் இதுதான். அப்படி இருக்கையில் வாக்குகள் குவிந்தது ஆச்சரியமில்லை. ஆரம்பத்தில் சூர்யா வாக்கு வேட்டையை ஆரம்பிக்க அவரை முந்திக்கொண்டு முதல் தடவையாக இம்முறை போட்டியாள்ளர்களில் 100 வாக்குகளை விஜய் கடந்தார். ஆரம்பத்தில் விஜய் சூர்யா போட்டியாக இருந்த இந்த வகை அஜித்துக்கு வாக்கு விழ ஆரம்பித்ததும் விஜய் அஜித் இருமுனை போட்டியாக மாறியது. இதில் விக்ரம் பாரிய வீழ்ச்சி காண சூர்யாவும் தாக்கு பிடிக்க முடியாமல் போக விஜய் அஜித் மாறி மாறி முன்னிலை வகித்தனர். அதன் பின் எந்த தங்கு தடையும் இன்றி தல அஜித் அமோக வெற்றி பெற்றுள்ளார். அதிக வாக்குகள் பெறப்பட்ட வகை, தனி நபர ஒருவருக்கு அதிக வாக்குகள் கிடைத்த வகை, முதலாமவருக்கும் இரண்டாமவருக்கும் இடையில் அதிக வாக்குகள் உள்ள வகை என்ற பல சிறப்புகள் கொண்ட வகை இது. இறுதியில் 1148 வாக்குகள் வித்தியாசத்தில் தல அஜித் ஆதிக்கம் செலுத்தும் நாயகனாக தெரிவாகி உள்ளார்.

சிறந்த நடிகை.

இங்கே நடந்ததோ இன்னொரு சுவாரஸ்யம். ஆரம்பத்தில் த்ரிஷா கொஞ்சம் போட்டி போட்டாலும் அதன் பின் அங்காடித்தெருவில் வாழ்ந்து காட்டிய அஞ்சலி 394 வாக்குகள் வித்தியாசத்தில் முதலிடத்தை பெற்றது. நட்சத்திரம் என்பதையும் மீறி நடிக்கும் நடிகளிகளை ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. ஏனைய நடிகைகளுக்கு சவாலாகவும் ஒரு முன் உதாரணமாகவும் இது அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.

சிறந்த நடிகர்.

இம்முறை சிறந்த நடிகரான அனைவரின் ஏகோபித்த ஆதரவில் ஒரு நடிகர் தெரிவாகி இருந்தாலும். இது சிலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது மட்டுமன்றி பல முன்னை நடிகர்களுக்கு ஒரு நல்ல பாடமாகவும் அமைந்துள்ளது. அநேகமாக எல்லோருக்கும் வாக்குகள் விழுந்தாலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் மற்ற நடிகர்களை விட நட்சத்திர அந்தஸ்து பெற்றவர்கள் என்பது உண்மை. நடிப்புலக மேதை கமலை விட 65 வாக்குகள் மட்டுமே பேராண்மை படைத்த இளம்புயல் ஜெயம் ரவி பெற்றமை அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசாகும். ஆனால் கமலையும் விஞ்சி வென்றிருப்பவரின் வெற்றி உண்மையில் ஆச்சரியமானது. காரணம் திறமை இருந்தும் அதை வெளியே கொண்டு வர வாய்ப்பில்லாது மாஸ் ஹீரோ வட்டத்தில் சிக்கி திணறிக்கொண்டிருந்த லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்து இப்போது யங் சூப்பர் ஸ்டாராக மாறி இருக்கும் சிலம்பரசன் தன் வழக்கமான பன்ச் டயலாக் விரல் வித்தைகளை விட்டு அமைதியாக இயல்பாக நடித்ததுக்கு அவருக்கு கிடைத்த பரிசு தான் இந்த வெற்றி. இந்த தோல்வியில் ஒரு ஆசானாக கமல் சந்தோசமடைவார் என்றே நம்புவோம். இந்த வெற்றியானது நிச்சயம் மற்ற நடிகர்களை கொஞ்சம் சிந்திக்க வைக்கும் நல்ல படங்களை தர வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

விருதுகளை வேன்றவர்களை பார்த்தாயிற்று இனி என்ன எல்லோர் சார்பாகவும் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கே தோற்றவர்கள் திறமை சாலிகள் இல்லை என்றில்லை. விருதுக்கான காலப்பகுதியில் அவர்களை விட வென்றவர்கள் கலக்கி இருக்கின்றார்கள் அது உங்களுக்கு பிடித்திருக்கின்றது என்பதுதான் உண்மை. அடுத்து என்ன இந்த தேரை வடம் பிடித்து இழுத்து வந்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள். மீண்டும் அடுத்த வருடம் சந்திப்போம்......

இந்த விருது வழங்கும் வைபவம் சம்பந்தமான சில பொழுது போக்கு பதிவுகளை வரும் நாட்களில் எதிர்பாருங்கள். ஏற்பாட்டுக்குழுவில் தெரிவுகளின் போது நடந்த சண்டைகள் சச்சரவுகள் சுவாரஸ்யங்கள் கலந்து எல்லாம் தர உள்ளோம்.

மீண்டும் நன்றி மீண்டும் சந்திப்போம்.
திரையுலக்குக்கும் பதிவுலக்கும் பாலம் அமைப்போம்.
இங்ஙனம்,
ஏற்பாட்டுக்குழுவினர்.